எதிர்காலம் சிரிக்கிறது..!

             எதிர்காலம் சிரிக்கிறது..!




                      குழந்தைகள்தான் ஒரு நாட்டின் எதிர்காலம். அவர்கள்தான்,  நாளைய உலகை ஆளப்போகிறவர்கள். எனவே அவர்களின் இளவயது காலம் முறையாக வழிநடத்த படவேண்டும். 

                     அவர்களின்  மன நிலையும் உடலும் சுறுசுறுப்புடனும் நேர்மையுடனும் இருந்தால்தான் அவர்களால் சரியான முறையில் செயல்பட முடியும். ஆனால், சிறுவர்களின் மனநிலை பாதிக்கும் படியான வகையில் தான் இன்றைய நாகரிக சூழல் அமைந்திருக்கிறது. 

                      அதேபோல் எதிர் காலத்தை யாரிடம் ஒப்படைக்க  போகிறோமோ அவர்களை ஒரு பொருட்டாகவே நாம் கண்டுகொள்வதுமில்லை.
                        
                      அவர்களின் மனதுக்கு ஒவ்வாத  நம்முடைய செயல் பாடுகளால் வெறுத்துப் போகிற சிறுவர்கள் ஒரு சமயத்தில்  தங்களின் நடைமுறை வாழ்க்கையை  மாற்றியமைத்து கொள்கிறார்கள். 

                      அதனால்தான் ஆங்காங்கே நடந்துவிடும் தவறுகள் சிறுவர்களின்  மீது அடையாலபடுத்தப் பட்டுவிடுகிறது.  ஆனால், உண்மையில் சிறுவர்களின் மனம் மிகவும் தூய்மையானது. 

                      அது எல்லோரையும் ஒன்றாகவே பாவிக்கிறது. அதில் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லை. நண்பன் எதிரி என்று  பிரித்துப்பார்க்கும் சிந்தனை இல்லை. ஆனால், அதனுள்  உண்மை இருக்கிறது, அடம் பிடிக்கிற பாசம் இருக்கிறது. 

                       அவர்களுக்கு கிடைக்க வேண்டியவை அந்தந்த தருணங்களில் சரியாக கிடைக்காமல் போவதால்தான்  தவறுகள் சில சமயங்களில் அரங்கேறிவிடுகின்றன. அந்த வகையில் அவர்களுக்கான பிரச்சினைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதை  ஆராய வேண்டிய அவசியம் நமக்கும் இருக்கிறது.

                       வாழ்க்கையின் ஒவ்வொரு புரிதலையும்  குழந்தைகள்  பெற்றோரிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர்தான் இவர்களின் முதல் வழிகாட்டியாய் இருக்கின்றனர். அந்தவகையில்  அவர்களிடமிருந்து இவர்கள் அதிகமாய் எதிர்பார்ப்பது ஒன்றைமட்டுமதான்  ஆம், அன்பை மட்டும்தான் இவர்கள் அதிகமாய் எதிர்பார்க்கிறார்கள். 

                      அன்பின் பகிர்வு அவர்களுக்கு கிடைக்கும் அளவீடுகளை பொறுத்தே பெற்றோர்களுக்கான  சிக்கல்களும் ஆரம்பிக்கின்றன. பிள்ளைகளை சரியான முறையில் கவனிக்காததன்  அடிப்படையில் ஏற்ப்படும் சிறு சிறு தேக்கம்தான் பின்னாளில் பெரும் விபத்தையே  ஏற்படுத்திவிடுகிறது. இவற்றையெல்லாம் பெற்றவர்கள் உணருவது எப்போது?

                      சமீப காலமாக சிறுவர்களின் நடவடிக்கைகள் அவர்களின் வயதுக்கு மீறிய  செயலாக நடந்து வருவது  கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே. எனினும் இதற்க்கெல்லாம் யார் காரணமாக இருக்கிறார்கள். 

                      சிறுவர்களின்  வாழ்க்கை திசைமாறி போவதை தடுப்பதற்காகத்தான் ஆங்காங்கே சிறுவர்களுக்கான சீர்திருத்தப்பள்ளிகள்  அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவை சிறைக்கூடங்கள் அல்ல, இவை சிந்தனைகளை சீர்தூக்கி விடும்  சீர்திருத்தப்பள்ளிகள்.

                     இந்த சீர்திருத்தப்பள்ளிகள் ஒருபோதும் சிறுவர்களின் மனத்தை மழுங்க செய்துவிடக்கூடாது  என்பதற்காகத்தான் இங்கு வரும் சிறுவர்களுக்கு தண்டனை என்கிற பெயரில் கல்வியும், மனதை ஒருமுகப்படுத்தும் தியானமும் கற்று தரபடுகின்றன. 

                     மேலும், உடல் வலிமையை கூட்டும் யோகா நல்ல சிந்தனையை வளர்த்துக்கொள்ள தத்துவ அறிஞர்களின் நூல்கள்  என சிறுவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டே  இவை இயங்கி வருகின்றன.

                     இந்த பள்ளிகள் சிறுவர்களின் சிந்தனையை சீர் செய்கின்றன. அவர்களின் பாதையை அவர்களுக்கு விசாலபடுத்துகின்றன.  ஒழுக்கத்தை பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் இந்த பள்ளிகள் சீர்திருத்தப்பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன.

                      சிறுவர்களின் வாழ்க்கை தரம் உயரவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கோடு  தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு நகரில்தான்  1887  ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் சிறுவர் சீர்திருத்த பள்ளி உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

                     அந்த வகையில் அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக குழந்தைகளின்  அனைத்து உரிமைகளும் பொறுப்புகளும் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற குழந்தை உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மாநாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

                     இதன் பின்பு 1920  ஆம் ஆண்டு நாட்டிலேயே முதல்முறையாக குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக  அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. இது " தமிழக அரசு குழந்தைகள் சட்டம் 1920" என்று அழைக்கப்பட்டது.

                     இப்படியாக சிறார்களின் தவறுகளை அவர்களுக்கு புரியவைத்து அவர்களை நல்வழி படுத்தும் சீர்திருத்தப்பள்ளிகளிலும் சில நேரங்களில் தவறுகள் அரங்கேறி விடுவதுண்டு. அந்த தவறுகள்தான்  சீர்திருத்த பள்ளிகளை உலகின் பார்வையில் நிறுத்திவிடுகிறது. 

                     அதனால்தான், சீர்திருத்த பள்ளிகளில் இருந்து சிறுவர்கள் தப்பித்து வெளியேறுகிறார்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படியான நிகழ்வுகளை  நினைவுபடுத்த வேண்டியது நமது கடமையும் ஆகும்.
                
                     சென்னை கெல்லீசில் உள்ள ஒரு சீர்திருத்த பள்ளியில் 3 சிறுவர்கள் தப்பியோடியது மக்களை அதிர்சிபடுத்தியிருக்கிறது. சிறுவர் சிறையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி, ஊழியர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குறித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. 


                     இந்நிலையில் உத்திர பிரதேசம் மாநிலம்  அலகாபாத் நகரில் ஷிவ்குடியில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் வார்டனாக பணியாற்றிய  வித்யாபூஷன் ஓஜா (52) பத்து வயதுக்கும் குறைவான வயதுள்ள 3 பெண் குழந்தைகளை பாலியல் பலாத்க்காரம் செய்ததை காவல்துறை விசாரணையில் அவரே ஒப்பு கொண்டிருக்கிறார்.

                      சீர்திருத்த பள்ளிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, கவனிப்பு, படிப்பு, மறுவாழ்வு என எல்லா ஏற்பாடுகளையும் செய்து தரவேண்டுமே ஒழிய அவர்களின் எதிர்காலத்தோடு ஒருபோதும் விளையாடிவிடக்கூடாது. 

                     அதே நேரத்தில் தொண்டு  நிறுவனகள், சமூக ஆர்வலர்கள் அவ்வபோது இந்த பள்ளிகளை கண்காணிக்கவேண்டும் என்று   நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஒரு வழக்கில் தெரிவித்திருக்கிறார். 

                      இப்படியாக, மனிதன் தெரிந்தோ தெரியாமலோ தாம் ஏற்றிருக்கும் தாய் தகப்பன் என்கிற பொறுப்பை மறந்து விடுவதால்தான்  இன்னதென்று தெரியாமல் கைநழுவ விட்டுவிடுகிறார்கள். நாகரிக மோகத்தில் மூழ்கி யிருக்கும் பெற்றோரால்தான் அதிகமான சிறார்கள்  குற்றவாளிகளாகின்றனர். 

                      பிள்ளை பெறுவது குடும்பத்தை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தி செல்வதுதான் என்றாலும் அந்த குழந்தைக்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும்  எல்லாவற்றிக்கும் மேலாக சகலரையும் நேசிக்க கற்றுகொடுக்கவில்லை என்றால்... 

                      குடும்பம் என்பது காற்றில் அகப்பட்ட சிலந்தி கூடுபோலதான் கலைந்து போய்விடும்.


வேக சுகுமாரன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்