இதற்கா மனிதனுக்கு ஆறாம் அறிவு

இருபது வருசமா சோறு போட்டு, பாசங்காட்டி.. பாதுகாத்து, நல்லது கெட்டது செஞ்சி, ஆசப்பட்டத வாங்கி குடுத்து புள்ளைய பெத்தவன் பத்தரமா வளப்பான். எங்கிருந்தோ வாரவன் காதல் பண்ணி தூக்கிட்டு போய்டுவாரா? ஒன் வீட்டுப் பொண்ணு காதலிச்சா ஏத்துக்க முடியுமா? உன்னால முடியுமா?

எனக்கு அழுகைதான் உண்மையில் வந்தது. ஆனால், சிரித்தேன் அப்போது... அவர்கள் தொடர்ந்தார்கள்.

எவ்ளோ திமிரு இருக்கனும். பெத்தவங்கள நெனச்சி பாருங்க. எவ்ளோ கஷ்ட பட்டுருப்பாங்க. அதான், ரோட்ல ஓட ஓட வுட்டு போட்டானுங்க. எங்கள பொருத்த வரைக்கும் கொலை செஞ்சது சரிதான். கட்டுப்பாடு கெளரவம்லாம் என்னாறது?

பெத்தவங்கள கஷ்ட படுத்திட்டு திருமணம் செய்யக்கூடாதுங்றதுல ஞாயம் இருக்கு, அதுக்காக கொலை செய்யறது சரியா?  ன்னு கேட்டேன்.

என்னங்க புரியாம பேசிட்ருக்கீங்க. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கு. சரி நீங்க சொல்றபடியே வச்சுப்போம். எல்லோரும் பொது கம்யூனிட்டிக்கு வாங்க. நீங்க சொல்ற மாதிரி காதல ஏத்துப்போம். அரசாங்க ஒதவி வாங்க ஒங்களுக்கு சாதி வேணும். கல்யாணம்னா கசக்குதா?  இப்பவும் சொல்றோம், நாங்க காதல எதுக்குல. அவங்கவுங்க அவங்க சாதிக்குள்ளயே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கட்டும்.

எவனாவது பெத்து வளத்து வச்சிருப்பான். இவனுங்க சாதி மாறிவந்து  கொத்திட்டு போய்டுவானுங்க. பின்ன பெத்தவன் சும்மா இருப்பானா? அதான் நடு ரோட்ல வச்சி போட்டானுங்க என்றார்கள் ஆக்ரோஷமாய்.

இதை பகிர்ந்து கொண்டவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள். நமக்கு பரிச்சயமானவர்கள்.

நம்மை சுற்றி சிரித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இதைத்தான் சொல்கிறார்கள் எனும் உண்மைநிலை தெரிய வரும்போது  எத்தனை வலி பிரவாகம் எடுக்கிறது.

இதற்கா மனிதனுக்கு ஆறாம் அறிவு
என தோன்றியது அப்போது எனக்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்