புத்தனும், அன்னை தெரசாவும்

சத்தியம் தொலைகாட்சி நிறுவனத்தின் தலையங்கத்தில் இது வெளி வந்திருக்கிறது. இருப்பினும் உங்களுக்காக இதை மறு பதிவு செய்கிறேன். 


 
1988 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக கிழக்கு கடற்கரையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் ஒன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படியான நகரமில்லை. ஆனால், உலக மக்களால் ஒவ்வொருநாளும் உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் இன்று கூடங்குளமும் ஒன்றாகிப் போனது. இங்குதான் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் திறனுள்ள அணுமின்சாரம் தயாரிக்கும் அணுஉலைகளை இந்திய அரசு நிறுவி வருகிறது. ஆதரவான அரசுக்கும் எதிர்க்கும் சாதாரண மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கூடம்குளத்தை நோக்கி உலகை திரும்ப செய்திருக்கிறது.

இன்றைய உலக தேவையில் நீருக்கு அடுத்தபடியாக மின்சாரம் என்றால் அது மிகையில்லை. உலக நாடுகள் பொருளாதார ரீதியிலான வளர்ச்சியைத்தான் வல்லரசு ஆவதற்கான முதல் காரணமாக கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதத்தை மின்சாரமும் தீர்மானிக்கிறது என்றால் அதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனால், அந்த மின்சாரத்தின் தேவைக்காக மனித உயிர்களை அடகு வைப்பதைத்தான் தன் கொள்கையாக இன்றுவரை  உலக நாடுகள் பல செய்துவருகின்றன.

மனித நாகரிகம் முதன் முதலாக சக்கரத்தின் பயன்பாட்டிலும் நெருப்பின் சூச்சுமத்திலும் இருந்துதான் பிறந்ததாக அறிவியலர்கள் கூறுகின்றனர். அது 18 ஆம் நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டு கால கட்டங்களுக்கு  மட்டும்தான் பொருந்தும். உலக போர்களினால் அணு ஆயுத பயன்பாடு அதிகரித்தபோதும் அவற்றின் மிக மோசமான விளைவுகளால் மனித சமூகம் அழிவுகளை சம்பாதித்த போதும் உலக நாடுகள் அவற்றை அமைதிக்காக நாங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டி கொண்டிருக்கின்றன வென்றால் இதை என்னவென்று சொல்வது. 
 
கூடங்குளம் அணு உலையை பற்றி இந்திய அரசு சொல்லும்போது இப்படித்தான் சொன்னது. "மின்சாரப் பற்றாக்குறையால் தமிழகம் உட்பட பலபகுதிகள் தடுமாறி வரும் நிலையில் அதற்கான சிறந்த தீர்வாக கூடங்குளம் அணுமின் நிலையம் அமையும். மக்கள் பயப்படுவது போல இது பாதுகாப்பற்றதல்ல. இது தொழிநுட்ப வசதியில் நன்கு மேற்பட்டது. 

பூகம்பத்தினால் ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்டது போன்றதொரு அழிவு ஏற்படும் சாத்தியம் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு இல்லை. அவ்வாறானதொரு தரைத்தோற்ற அம்சத்தில் இது அமைக்கப்படவில்லை. இவ்வணுமின் நிலையம் அதி நவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதுடன் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், சுனாமி போன்ற இயற்கை அழிவுகள் ஏற்பட்டாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அடித்துக் கூறுகின்றது இந்தியா".

உலகில் உள்ள நாடுகளில் வெறும் 31 நாடுகள் மட்டுமே மின் தேவைக்காக அணுமின் நிலையங்களை சார்ந்திருக்கின்றன. உலகில் கிடைக்கும்  யுரேனியத்தில் 23% யுரேனியம் ஒவ்வொரு ஆண்டும்  ஆஸ்திரேலியாவில் இருந்துதான் பெறப்படுகிறது. ஆனால், இதுவரை ஆஸ்திரேலியாவில் ஒரு அணுமின் நிலையமும் தொடங்கப்படவில்லை என்பது ஏன் என்கிற கேள்வியை நம்முள் வர செய்துவிடுகிறது. 

உலக மின் தேவையில் அணுவின் மூலம் கிடைக்கும் வெறும்  7% மின்சாரத்துக் காகவா இந்த நாடுகள் அணு உலைகளை வளர்த்தெடுக்க  முனைப்பு காட்டுகின்றன? இல்லையென்றால்... மின்சாரத்துக்கான மாற்று ஏற்ப்பாடுகளை மற்ற நாடுகள் செய்து முடிக்கும்போது ஏன் நம்மால் முடியாதா?

உலகம் பல இயற்க்கை வளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதால் உயிர்களின் தேவைக்கு இந்த உலகின் பகுதிகளையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. நாகரிகத்தின் வளர்ச்சியில் அடிமைப்பட்டிருந்த நாடுகள் எழுந்து நிற்க்க ஆரம்பித்திருக்கின்றன. இவர்கள் தங்களை மற்ற நாடுகளோடு  ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அவசரத்தின் மையத்தில் சிக்கி அத்தியாவசிய தேவைக்கான தயாரிப்புகளை துரிதபடுத்திக் கொள்ளவேண்டியிருகிறது. 

இந்திய அரசின் செயல்பாடுகளை ஊமையாக பாத்துக் கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களின் பிரதிபலிப்பு அவர்களின் குழந்தைகளிடமும் பிரதிபலிக்கத்தான் செய்கிறது.

20 ஆம் நூற்றாண்டில் ஆசிய கண்டத்திலிருந்து ஒரு கடிதம் மிகவும் உருக்கமான செய்தியை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றதென்றால் அது அமெரிக்க அதிபர் ஒபமாவின் மகள்களுக்கு இடிந்தகரை கடலோர கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் எழுதிய கடிதமாகத்தான் இருக்கும். 

அதிகார வர்கத்தின் கண்களுக்கு இதை கொண்டு சென்றால் ஒரு வேலை நம் கோரிக்கை எற்க்கப்படுமோ என்கிற நப்பாசையில் இடிந்தகரை பகுதியை சேர்ந்த குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமெரிக்க அதிபரின் மகள்களுக்கு  இப்படி ஒரு கடிதம் எழுதினார்கள். 

"அன்பிற்குரிய மாலியா மற்றும் சாஷா, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அமெரிக்க குழந்தைகளும் இந்திய குழந்தைகளும்  பிற நாட்டு குழந்தைகளும் ஒன்றிணைந்து நமக்காக அணு உலைகளும் அணு ஆயுதங்களும் அற்ற ஒரு பாதுகாப்பான உலகைக் கட்டமைப்போம். உங்களது பெற்றோர்களிடம் பேசிக் கூடங்குளம் அணு உலையை மூடவும் அமெரிக்கா எந்த ஒரு அணு உலையையும் எங்கள் நாட்டில் தொடங்காதிருக்கவும் உங்கள் பெற்றோர் களிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று எழுதினர்.

இன்று இந்திய அளவில் பேசி தீர்க்க முடியாத மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் கூடங்குளம் அணு உலை தொடக்கத்தின் ஆதி 32 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்தது. 

1980 ஆம் ஆண்டில் அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமை யிலான  அரசு முதன் முதலாக  ரஷ்யாவோடு ஒரு  உடன் படிக்கைக்கு  தயாரானது. அதன் சாராம்சம் என்னவென்றால் இந்தியா தனக்கென்று சொந்தமாக ஒரு நீர்மூழ்கி கப்பலை உருவாக்க விரும்புகிறது என்றும் அதற்கு ரஷ்யாவிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கிறது  என்பதுமாகும். 
இந்திராகாந்தியின் வேண்டுகோளுக்கு ரஷ்யா  இணங்கினாலும்  அதற்க்கு கைமாறாக  ரஷ்யாவிடமிருந்து இந்தியா  8 அணு உலைகளை வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது ரஷ்யா. இந்த நிபந்தனைக்கு அன்றைய இந்திய அரசும் தலை சாய்க்கத்தான் செய்தது. பஞ்சாப் பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டவர்களை ஒடுக்க ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் எனும்  நடவடிக்கையை மேற்கொண்டு பஞ்சாப் மக்களின் மனதில் ஒரு வறுத்த பதிவை இந்திரா ஏற்ப்படுத்தி இருந்ததால் 1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி தன் பாதுகாவலர்களாலே  சுட்டுக படுகொலை செய்யபட்டார். அதனால், ரஷ்ய உடன்படிக்கை சில நாள் கிடப்பில் போடப்பட்டது. 

இருப்பினும் அவருக்குப்பின் பிரதமராக  பதவி ஏற்ற ராஜீவ்காந்தி 
1988  ஆம்  ஆண்டு, ரஷ்யாவின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் 8 அணு உலைகளை வாங்குவதற்கு ரஷ்ய நாட்டோடு ஒப்பந்தம் செய்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த முதலில் கர்நாடகம் அடுத்து கேரளாவென்று சுற்றியடித்த மத்திய அரசு அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பால்  கடைசியாக வந்தாரை வாழவைக்கும்  தமிழகத்தில்  தேர்ந்தெடுத்த இடம்தான் கூடங்குளம்.

ஆரம்பத்தில் தமிழகத்திலும்  எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், அது ஆமை வேகத்தில் மிக மிக மெதுவாக நடந்தது. இதைப்பற்றிய சிந்தனை பெருமளவில் பேசப்படாமலேயே இருந்தது.  கூடங்குளத்தை சேர்ந்த மக்களுக்கு  இந்த அணுமின் நிலையம் அமைக்கப்படுவதால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் தங்களுடைய கஷ்ட்டமேல்லாம் தீர்ந்துவிடும் இனிமேல் யாரும் கடலை நம்பி உயிரை பணயம் வைக்கவேண்டாம்  என்கிற நம்பிக்கை இருந்தது. 

ஆனால், நாளடைவில் அணுவின் செயல்பாட்டால் உலகம் சந்தித்த கோர நிகழ்வுகளை கேட்டும் படித்தும் தெரிந்துகொன்டப் பிறகு நம்முடைய காலகட்டத்திலேயே நிகழ்ந்த செர்நோபில் அணு விபத்து (Russia - 1986 april 26), போபால் விஷவாயு கசிவு (India – 1984 december 3),  புகுஷிமா (japan - 2011 march 11) அனுவிபத்து போன்றவை கூடங்குளம் மக்களை பெருமளவு சிந்திக்க வைத்திருக்கும் என்றே தோன்றுகிறது அவர்களின் தீவிர அணு ஒழிப்பு செயல்பாட்டை பார்க்கும்பொழுது.

தற்போதைய இடிந்தகரை மக்களின் போராட்டங்கள் போல அத்தனை வேகம் அதில் இல்லை. 1987 இல் திருச்செந்தூரிலும்  அதை தொடர்ந்து 1988 இல் திருநெல்வேலியிலும் 1989 இல் நாகர்கோயிலிலும் தூத்துக்குடி யிலும் மிகப்பெரிய பேரணியும் ஊர்வலங்களும்  நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி யில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் தான் ஏனைய அரசியல் கட்சித்தலைவர் களும்  அன்றைய இந்திய அரசின் தொடர்வண்டித்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களும் கலந்துகொண்டனர்.

பல்வேறு காலங்களில் தொடர்ந்து கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது நிகழ்த்தப் பட்ட தடியடிகளையும் தாண்டி அன்று தொடங்கிய போராட்டம் பலரால் முன்னெடுக்கபட்டு இன்று மிகப்பெரும்  எண்ணிக்கையிலான மக்கள் கடந்த 400 க்கும் மேற்பட்ட நாட்களாய் அமைதியான முறையில்  உண்ணா நோன்பு  போராட்டத்தை தங்களின் எதிர்கால்  சந்ததிக்காய் நடத்துவதாக சொல்ல வைத்திருக்கிறது.

1986 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி துறை கொடுத்த அறிக்கையின்படி இந்திய கடலோர பகுதிகளில் சுனாமிக்கான சாத்தியக்கூறு இல்லை யென்றும் புயலை மட்டுமே கணக்கில் கொள்ளலாம் என்றும் கூறிய அறிக்கையை கணக்கில் எடுத்தக்கொள்ளபட்டதால்தான் 2001 ஆம்  ஆண்டு கூடங்குளத்தில் அணுமின் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கியது. இருப்பினும்  2004 ஆண்டு ஆழிபேரலை ஏற்ப்பட்டு இந்திய கடலோர பகுதிகள் பெருமளவில் சேதத்தை சந்தித்தப் பிறகும் திட்டத்தை மாற்றாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருவதுதான் அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையையும் வருத்தத்தையும்  பதிவு செய்திருக்கிறது.

கூடங்குளத்தை சேர்ந்த மக்களால் மட்டுமல்லாது அல்லாது உலகளவில் இன்று அணு உலைகள் அகற்றப் படவேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் முன்மொழிவுகளாக இருக்கின்றன. மக்களின் சொல்லாடல்கள் வெறும் வாய் வாரத்தையோடல்லாது அது எதிர்கால சந்ததியின் வாழ்க்கைக் கானது என்பதை மையைபடுத்தி முன்னெடுக்கப் படுவதால் தான் பல்வேறு கட்சியும் இதற்க்கு ஆதரவளித்து வருகின்றன. 

இந்நிலையில்  இவற்றில் முக்கிய காரணியாக பார்க்கபடுவது அணு கழிவுகளை அழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இதுவரை  இல்லையென்பதும் அணுமின் நிலையங்கள் செயல்படும் பகுதிகளில் எல்லாம் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ரத்தபுற்றுநோய், கேன்சர், தைராய்டு போன்ற கொடிய நோய்கள் பரவிவருகின்றன என்பதும்  ஆகும்.

மீன் பிடிப்பதை மட்டுமே நம்பி காலம் காலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் கடற்க்கரை மக்கள் தங்களின் எதிர்கால சமூகமாவது நலமோடு வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லை.  ஆனால், அரசுக்கு கட்டுபடாத மக்களாக வாழ்வதில்தான் இன்றைய அரசுகளுக்கு பெரும் சிக்கல் இருப்பதாக படுகிறது. எனவேதான் நியாயம் மக்களின் பக்கம் இருப்பினும்  அவற்றை அமைதிகாத்துக் கேட்டுக்கொள்ளும் அவகாசத்தை எந்த அரசும் மக்களுக்கு கடைசிவரை  கொடுப்பதில்லை.  

அணுமின் நிலையங்கள் செயல்பட வேண்டுமென்றால் மிகவும் அதிகமான அளவில் தண்ணீரின் தேவை அவசியம் இருக்கும். 1000 மெகாவாட் திறனுள்ள ஒரு அணு உலையின் செயல்பாட்டுக்கு  ஒவ்வொரு நாளும் 51 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படும். கூடங்குளத்தில் 6 அணு உலைகள் செயல்பட்டால் 2.02 கோடி லிட்டர் தண்ணீரின் தேவை இருக்கும். 

எனவே கடலை நம்பியே இந்த திட்டம் பெரும்பாலும் செயல்படுத்தப் படுகிறது. அதிகளவிலான நீர் அணுமின் நிலையங்களில் பயன் படுத்தப்பட்டு மீண்டும் கடலில் திறந்துவிடப்படுவதால் அணுக் கழிவு களை சுமந்து கொண்டுவரும் நீரால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் அபாயமும்  இருக்கின்றன. 

1000 மெகாவாட் திறனுள்ள ஒரு அணுமின் நிலையம் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 30 டன் அணுக்கழிவுகளை வெளியேற்றுகிறது.  கூடங்குளத்தில் 2000 மெகாவாட் திறனுள்ள அணுமின்சாரம் தயாரிக்கும் பொழுது எவ்வளவு கழிவுகள் வெளியேற்றப்படும்? இதுபோன்று கடலில் கலக்கும் கழிவுகலால் தான்  மரபு ரீதியிலான குறைபாடுகள் மனிதர் களுக்கு ஏற்ப்படுகின்றன. 

மேலும் பல்வேறு நோய்களும் ஏற்ப்படுகின்றன. ஆக அணுமின் நிலையங்களால் ஆபத்துக்கள்தான் பெரிதளவில் இருக்கின்றனவே ஒழிய அதிலிருந்து கிடைக்கும் வெறும் 7% மின்சாரத்துக்காக அணுமின் துறையை நாம் எப்படி ஏற்றுகொள்ள முடியும்? மக்களின் வாழ்வாதாரத் துக்காக என்று சொல்லிகொள்கிற  உலக நாடுகள் அதை தள்ளி வைப்பதற்கு யோசிக்கலாமே. 

1991 ஆம் ஆண்டில் வெறும் 2 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவியிருந்த ஜெர்மனி 2011 ஆண்டில் 24,800 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்திருந்தது. கடந்த மே மாதத்தின் ஒரு நண்பகலில் மட்டும் ஜெர்மனி 22,000 மெகாவாட்   மின்சாரத்தை உற்பத்தி செய்தது இங்கே குறிப்பிடப்பட வேண்டியது. இது 30க்கும் மேற்பட்ட அணு உலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்னுற்பத்திக்கு சமம். 

குளிர் பிரதேசமான ஜெர்மனி போன்ற நாடுகளிலேயே இவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமென்றால் இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளில் ஏன் முடியாது என்பதும் நமது கேள்வியாக இருக்கிறது. அணுமின் நிலையங்களை தாண்டி அதைவிட குறைவான பொருளாதார செலவில் மின்சார உற்பத்திக்கான வழியிருந்தும் நாடுகள் யோசித்து கொண்டிருப்பதர்க்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான் இருக்கமுடியும். அது ஒரு வகையில் நாடுகளின் பாதுகாப்பு என்கிற பேரால் அடையாலபடுத்த பட்டிருக்கலாம் என்றே நினைக்கவும் தோன்றுகிறது.

இதனால்தான் உலகளவில் பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூடிவிட்டு சூரிய மின்சாரத்தை பெறுவதற்கான வேலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. ஜப்பான்,  ஜெர்மனி போன்ற தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த   நாடுகளே அணு உலைகளை இழுத்து  மூடிவிட்ட பொழுது, இத்தாலி அணுமின் நிலையங்களே வேண்டாம் என முடிவெடுத்து விட்டப் பிறகு சில அதிகார வர்க்கத்தின் நலன்களுக்காக இந்தியா ஏன் அணுமின் திட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்கிற கேள்வியை நாம் அரசிடமே விட்டுவிடலாம்.

உலகிலேயே மதசார்பற்ற மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்ந்துவரும் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையை கர்ப்பித்துவரும் இந்தியா உலக அமைதிக்காக சமாதானத்தை பரப்பிவரும் இந்தியா மக்களின் கோரிக்கைகளை  ஒரு பக்க செவியால் கேட்டு மறுபக்கத்தில் மறந்துவிடுவது மிகப்பெரிய வருத்தத்தைத்தான் வரலாற்றில் பதிவு செய்கிறது. 

ஒரு வேலை கூடங்குளத்தில் புகுஷிமா போன்றதொரு விபத்து ஏற்ப்பட  நேரிட்டால் அதன் தாக்கம் தமிழகம், கர்நாடகம் , கேரளா, அந்தமான் நிக்கோபார், மலேசியா, லட்சத்தீவுகள், இலங்கை என பறந்து விரிந்த ஒரு நிலப்பரப்பை விழுங்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.  

இருபதாம் நூற்றாண்டுக்கு பிறகு உலகம் அழிவின் பாதையில்தான் பயணம் செய்யும் என்று நம்பிகொண்டிருக்கிற மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லாம். மனிதன் தன்னுடைய தேவைக்காகத்தான் கண்டுபிடிப்பு களை தொடங்கினான். ஆனால், அந்த கண்டுபிடிப்புகளின் எல்லை அவனை  உலகின் கடைசி அத்தியாயத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. 

நாடுகளின் எல்லையற்ற ஆதிக்க போக்கால் அமைதியிழந்து மனிதர்களின்பால் ஒற்றுமையின்மை ஏற்பட்டு விரோதபோக்கு நிலைக்கும். தங்களின் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ள எந்த உயிரும் கடைசியில் இதைத்தான் செய்யும்.

பல மேற்க்கத்திய நாடுகள் அணுமின் தேவையை குறைத்து கொண்டு 
மாற்று வழியை நாடிக்கொண்டிருக்கும் போது ஆசிய நாடுகள் மட்டும் இன்னும் அணுமின் தேவையை அதிகரிக்கும் வழியை தேடி கொண்டிருப்பதன்  பின்னால் இந்த நாடுகள் தங்களை உலகில் நிலை நிறுத்திகொள்ளும் பணியை செவ்வனே செய்வதாக படுகிறது. அமைதிக்காகவும் உலகின் தேவைக்காகவும் தாம் உருவாக்கிய அணு கோட்பாடு ஒரு கட்டத்தில் அமைதியை சிதைக்க தொடங்கிய போது ஐன்ஸ்டீனாலேயே அதை தடுக்க முடியவில்லையே... இவர்கள்  என்ன செய்துவிடபோகிறார்கள்? 

சாக்கடை நீரையும் சுத்திகரித்து குடிக்கும் தத்துவம் இந்த நவீன உலகத்தில் செயலாக்கத்தில் இருக்கும் போது மின்சாரம் என்ற ஒற்றை சொல்லுக்காக அணுவை நம்பியிருக்கும் நாடுகளுக்கு மாற்று வழி இல்லையா? அமைதியை போதித்த புத்தனும், அமைதிக்காக உலகம் போற்றிய அன்னை தெரசாவும் வாழ்ந்த இந்த மண்ணில் இனிவரும் நாட்களில் அரசு என்ன செய்யபோகிறது? 

கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு எந்த விபத்தும் ஏற்ப்பட போவதில்லை என்று மத்திய அரசு கூறிக்கொண்டாலும்... நீண்டகால அணுமின் திட்டங்களால் நிச்சயம் ஒரு நாள் மானுட சமூகம் வருத்தப்படும் என்பது மட்டும் நிதர்சனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்