உலகம் ஒரு நாடக மேடை

 
2013 ல் மட்டும் 
நினைப்பது நடந்துவிடவா போகிறது. 

பூக்களுக்கு ஆசைப்பட்டு
வேர்களுக்கு விஷம் ஊற்றும்
முட்டாள்களின் தேசம் இது.

கல்வி கற்ற
ஒழுக்கமுள்ள
நாகரிக முட்டாள்கள்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
உலகின் முடுக்குகள் எங்கும்.

உயிர்களின் மதிப்பறியாது வாழும்
நவீன கற்கால மனிதர்கள்.

காதலுக்கும் காமத்துக்கும்
அர்த்தம் தெரியாத
அரைவேக்காடுகள்...

சோற்றுக்கு பதில்
எதை தின்றார்களோ
சாதியும் மதமும் தான்
வேண்டுமென்கிறார்கள்.

பெரியார்களும் அம்பேத்கார்களும்
பிறந்து பிறந்து சலிப்படைந்து
இனி பிறக்காத ஒரு அவதாரம்தான்
எடுப்பார்கள் போல.

யோனியை
கிழித்துக்கொண்டு வரும்போது
இரத்தத்தோடு சேர்ந்தே வந்ததா சாதி?

அசிங்கமான வார்த்தைகளை
தேடித் தேடிப் பார்க்கிறேன்
என்னை நானே சபித்துகொள்ள.

அசதியில் உறங்கிப்போன நினைவுகளை 
இன்னமும் கேட்டுகொண்டிருகிறேன்.

கிழிந்த ரூபாய் நோட்டுக்கள்
தரும் மரியாதையை
எந்த பட்டு சட்டையும்
எங்களுக்கு தருவதேயில்லையே ஏன்?

அரசுக்கும் அரசுக்கும் இடையே
ஆண்டாண்டுகால யுத்தம்.

நீர் கேட்டு
நீர் கேட்டு மாய்ந்து
நிலமெல்லாம் விவசாயி ரத்தம்.

எச்சில் துப்பி
அழித்துவிட்டுப் போக
நினைவுகள் என்ன ...
கரும்பலகையில் கிறுக்கப்பட்ட
வெள்ளைக் கோடுகளா?

இனிமேல் 
சுவர்களில் எழுதிதான் வைக்கவேண்டும்.

 
பெண் பிள்ளைகள்
பிறந்தால் பதுக்கி வையுங்கள்
காமுகர்கள் வலையவந்து
கொண்டிருக்கிறார்கள்
கற்பின் தோட்டத்தை
களைபறிக்க..

பெற்றவனின் வயிற்றெரிச்சல்
வார்த்தைகளிலேயே
வாய்க்கரிசி போடும்.
நம் வன்மத்தின் மீது வரலாறு
காரி உமிழும்.

குடிக்கத் தண்ணீர் கேட்டால்
குனிய வைத்து
வெந்நீர் ஊற்றும்
சமூகம் பிறந்திருக்கிறது.

உலகம் அழியாமல் என்ன செய்யும்?

திறவுகோலை தொலைத்துவிட்டு
தெருவுக்கு வந்துவிட்டோமோ
என யோசிக்கத்தான் செய்கிறது.

கண்டுபிடிப்புகளின் புரட்சி
காலுக்கடியில் குழி பறித்துவிட்டது.

தொட்டு
முத்தமிட்டுகொல்லுங்கள் மரணத்தை
வாழும்போதுதான் மனிதனாக வாழவில்லை
சாகும்போதாவது
கொஞ்சம் இருந்துவிட்டு போகட்டும்
அடிமனசில் ஈரம்.

பாலஸ்தீனம் வந்துவிட்டது
ஈழமும் வந்துவிடும் என்று
நம்பி தொலைக்காதீர்கள்... 


அதற்க்கு,
இன்னும் சில ஆண்டுகள்
ஆகலாம்...

அமெரிக்ககாரனுக்கும் 
ஐ.நா.வுக்கும் என்ன அவசரம்
இலங்கையில் பெட்ரோலா
கிடைக்கிறது.
 
இரண்டாம் நாளே
ஈழம் பிறக்க.

ரத்தத்தால் விதியெழுதும்
பழக்கம் நம் தலைவர்களுடையது.

அவர்கள் போகிறபோக்கில்
சொல்கிற வார்த்தைக்கெல்லாம்
அர்த்தம் தேடினால்
மொழிகளுக்கு இன்னொரு
அகராதிதான் வேண்டும்.

பாலை வனங்களில்...
மழை பிரதேசங்களில்...
சமவெளிகளில்...
எங்கும்...
கைப்பிடிக்குள் அக்கினியின் வாசம்
விதியை நொந்து
விரல்கள் எழுதுகின்றன
மணல் பக்கங்களில்...

உலகம் ஒரு நாடக மேடை என்று.

நம்பி நம்பி
நாசமாய் போன சமூகம்தானே
நம்முடையது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்